ஷக்ரி என்ற எழுத்தாளரை பற்றி சாருநிவேதிதா அவரது இணைய தளத்தில் எழுதியிருந்தார். அதை படித்த பின் அவருக்கு அனுப்பிய கடிதம் இது.
நாமெல்லாம் (உங்களை இதில் சேர்த்துக்கொள்ளலாமா தெரியவில்லை) வேலைக்கு போய் மாதச்சம்பளம் வாங்கி, திருமணம¢ முடித்து, பிள்ளைகள் பெற்று படிக்கவைத்து, அவர்களுக்கு திருமணம் முடித்து, பேரன் பேத்தி பார்த்து கடைசியாக இறந்து போகும் மனிதர்கள். கொஞ்சம் கடந்தால் அரசியல் தெரியும். அதில் கலைஞர், புரட்சி தலைவி, புரட்சிகலைஞர் போன்றவர்கள் வருவார்கள். அதையும் கொஞ்சம் கடந்தால் சிபிஎம், சிபிஐ வரும். இன்னும் கடந்தால் எம் எல் கட்சி வரும். எம்எல் கட்சி நக்சல்பாரி கட்சி, இப்போது லால்கார் கட்சியாகி விட்டது. இரண்டுமே மேற்குவங்கத்தில் உள்ள ஊர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இப்படிக்கடந்து கொண்டே போகும் போது, மற்ற மனிதர்களைப் போல நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்போம். மற்ற மனிதர்களைப் போல வீடு வாசல் கனவுகள் இல்லாமல் இருப்பபோம். மற்ற மனிதர்களைப் போல திருமணம் என்ற பந்தத்தில் சிக்காமல் அல்லது சிக்கியிருந்தாலும் அதில் இருந்து அறுத்து வெளியே வந்திருப்போம். அறுக்க முடியாவிட்டால், மனைவியிடம் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை கைகழுவி விட்டு, நாம் பாட்டுக்கு இந்தியாவில் புரட்சி நடத்துவதற்காக ஏதேனும் அறைக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்போம்.இலக்கியத்திலும் இதுபோன்ற கடந்து செல்லுதல் உண்டு. அடுக்கு மொழி மரபுக்கவிதைகள் கடந்து புதுக்கவிதை வந்து........ உரை நடை இலக்கியத்தில் அடுக்கு மொழியில் இருந்து சாதாரண புழங்கு தமிழுக்கு வந்து......... எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதுவதில் இருந்து ஒரு சிலருக்கு மட்டும் புரியும் படி எழுதி கடைசியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக புரியும் படி எழுதுகிற வரை கடந்து சென்று கொண்டிருக்கிறது இலக்கியம்.எவ்வளவு து£ரம் கடந்து வந்தவர்களாக நாம் இருந்தாலும் சரி. அது இலக்கியமானாலும் அரசியலானாலும் இரண்டும் சேர்ந்த கலவையானாலும். கடந்து கடந்து வந்திருந்தாலும், நாமெல்லாம் ஓட்டலில் அல்லது வீட்டில்தான் சாப்பிடுவோம். நேரா நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கலாம். தெருவில் பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து நம்மால் சாப்பிட முடியாது. பணம் இல்லாவிட்டால் யாரிடமாவது கடன் கேட்போம். பிக் பாக்கெட் அடிக்க நம்மால் முடியாது.இதுதான் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம்.அதேசமயத்தில் மற்றவர்களை போல விளிம்பு நிலை மனிதர்களை நாம் மோசமானவர்களாக பார்ப்பதில்லை. பரிதாபத்திற்குரியவர்களாக அல்லது ரசிப்புக்குரியவர்களாகப் பார்க்கிறோம். ஏனெனில் நாம் கடந்தவர்கள் இல்லையா?எங்கோ ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த மனிதர்களை பார்க்கிறோம். சின்னக்குழந்தைகள் சர்க்கசில் வரும் மிருகங்கள் குறித்து பயப்படுவதில்லை. அருவருப்பதுமில்லை. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன.இப்படித்தான் எழுத்தாளர்களான சிலர் அந்த மனிதர்களை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.நீங்கள் அப்படி இருக்கலாம். ஆனால் ஷக்ரி அப்படி அல்ல என்று நீங்கள் எழுதியிருப்பதில் இருந்து தெரிகிறது. ஏனெனில் ஷக்ரி மொட்டை மாடியில் நின்றவர் அல்ல. அவர் தெருவில் அந்த மனிதர்களில் ஒருவராக இருந்தவர். அந்தக்கூட்டத்தில் அவர் இருந்தவரையில் அவரை நாம் கவனிக்கவில்லை.கடைசியாக ஒருநாள் அவர் அவரைப்பற்றியே எழுதுவதற்கு நம்மோடு மொட்டை மாடிக்கு வந்து விட்டார். நம் கூட்டத்தில் சேர்ந்ததற்கு பிறகுதான் நமக்கு அவரை அடையாளம் தெரிந்தது. எது எப்படியோ ஷக்ரியின் வாழ்க்கை, அந்த எழுத்துக்கள் எத்தனைதான் துன்பங்கள் நிறைந்ததாக இருந்தாலும் நமக்கு அலுக்கவே இல்லை. ஷக்ரிக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். துன்பமான வாழ்க்கையை எப்படி அலுக்காமல் ரசிக்கிறாய் என்று கேட்டு விடாதீர்கள். அதைக்கூட ரசிக்கும் படி எழுதும் ஆற்றல் ஷக்ரிக்கும் உங்களுக்கும் உண்டு. துன்பமோ இன்பமோ அடுத்து என்ன என்ற சுவாரஸ்யத்துடன் வாழ்க்கை செல்ல வேண்டும் அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக